2022ஆம் ஆண்டிற்கான தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்கள் சிறந்த இடங்களைப் பெற்றதற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மத்திய கல்வி அமைச்சகத்தின் NIRF தரவரிசைப் பட்டியல் 2022-இல் தத்தமது பிரிவுகளில் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இதையும் படிக்க- பழங்கள் சாப்பிட்டா மன அழுத்தம் வராதாம், ஆய்வில் கண்டுபிடிப்பு
உயர்கல்வியில் திராவிட மாடலின் மாட்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரம்!அதுவும் இத்தரவரிசைப் பட்டியலானது நாம் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடும் இன்று வெளியாகியிருப்பது சாலப் பொருத்தமானது. குறிப்பாக, இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெரிய பெருமையை நான் பயின்ற மாநிலக் கல்லூரி பெற்றிருப்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இச்சாதனைக்குக் காரணமான கல்லூரி நிர்வாகத்துக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் மாணவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.