மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.
ஆனால், மேட்டூர் அணையின் நீர் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருப்பதால் நடப்பு ஆண்டில் கால்வாய் பாசனத்திற்கு விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டது.
இன்று முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு கிழக்கு மேற்கு கால்வாயில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | மேட்டூர் அணை நிரம்பியது: 16 கண் மதகுகளில் இருந்து நீர் திறப்பு!
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத் தேவை குறையும்.
மேட்டூர் அணை கிழக்கு மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், கால்வாய் மதகுகளை உயர்த்தி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டார்.
இந்நிகழ்ச்சியில் மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், மேட்டூர் நகர திமுக செயலாளர் காசி விஸ்வநாதன், மேட்டூர் நகர மன்றத் தலைவர் சந்திரா, மேட்டூர் நகர மன்ற முன்னாள் தலைவர் துபாய் கந்தசாமி, நகர் மன்ற உறுப்பினர்கள் ரங்கசாமி, வெங்கடாஜலம் முருகேசன், ஈஸ்வரி மற்றும் செல்வி உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் விவசாயிகளும் திரளாக பங்கேற்கின்றனர்.
இதையும் படிக்க | முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!