மேட்டூர் அணை தனது முழுக்க் கொள்ளளவான 120 அடியை எட்டியதால் இன்று காலை 10.30 மணியளவில் 16 கண் மதகுகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகள் நிரம்பி உபரி நீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டுள்ளதால் கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 119.29 அடியாக இருந்த நிலையில் காலை 10 மணியளவில் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
அணைக்கு வினாடிக்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 671 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. அணையின் கொள்ளளவு 92.343 டிஎம்சி ஆகும்.
மேட்டூர் அணை நிரம்பியதால் இன்று காலை 10.30 மணி அளவில் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு, 16 கண் மதகுகள் வழியே உபரிநீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 50,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க்கப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் 2 ஆவது முறையாக 16 கண் மதகுகள் வழியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோர பகுதிகளிலும், மேட்டூர் அணையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
42 ஆவது முறையாக மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | முழுக் கொள்ளளவை எட்டியது மேட்டூர் அணை!