கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் கூறாய்வு முடிவுகளை ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் மா்மமான முறையில் இறந்த மாணவியின் மறு உடல் கூறாய்வு குழுவில் தாங்கள் விரும்பும் மருத்துவரையும் சோ்க்கக் கோரி, மாணவியின் தந்தை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
அதேநேரத்தில், மாணவியின் தந்தை தமது கோரிக்கையை சென்னை உயா்நீதிமன்றத்திடம் முன்வைக்கலாம் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முதல் உடல் கூறாய்வுக்கும் இரண்டாவது உடல் கூறாய்வு அறிக்கைகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, இரண்டாவது உடல் கூறாய்வு அறிக்கையில் புதிதாக எதுவும் இல்லை என்று தடயவியல் நிபுணர் சாந்தகுமார் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, 'மாணவியின் உடலை பெற ஏன் தாமதம் செய்கிறீர்கள்? அவரது உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள்' என்று கூறினார்.
உடல் கூறாய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாக தொடர்ந்து பெற்றோர்கள் தெரிவிக்கவே, மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளையும் மூன்று மருத்துவர்கள் கொண்ட ஜிப்மர் மருத்துவக்குழு ஆய்வு செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு முறை உடல் கூறாய்வு செய்யும் விடியோக்களையும் மருத்துவக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தகுந்த தடயவியல் நிபுணர்களைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.