அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு அறிவித்துள்ளார்.
அரசு இ-சேவை மையங்களில், வருவாய் மற்றும் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றதழ் உள்ளிட்டவை இணையதள சேவை வாயிலாக வழங்கப்படுகின்றன. இதேபோன்று விவசாய வருமானச் சான்று, சிறு, குறு விவசாயி சான்று, கலப்பு திருமண சான்று, விதவை சான்று, வேலையில்லாதவர் என்பதற்கான சான்று, குடிபெயர்வு சான்று, இயற்கை இடர்பாடுகளால் இழந்த பள்ளி, கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், ஆண்குழந்தைகள் இல்லை என்பதற்கான சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ் போன்றவை மின்னாளுமை திட்டத்தில் அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், திருமணமாகாதவர் என்ற சான்றிதழை அரசு பொது இ-சேவை மையங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்துள்ளார்.
மேலும், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புவோர் இச்சான்றிதழை சம்மந்தப்பட்ட கோயில் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.