கள்ளக்குறிச்சி மாணவியின் உடல் எடுத்து சென்ற ஆம்புலன்ஸ் சிறு விபத்துக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூா் தனியாா் பள்ளி மாணவியின் உடலை சனிக்கிழமை (ஜூலை 23) காலை 7 மணிக்குள் பெற்று, மாலைக்குள் இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டுமென மாணவியின் தந்தை ராமலிங்கத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அதன்படி, மாணவியின் உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அமைச்சர் சி.வி. கணேசன், எம்எல்ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மாணவியின் உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. மாணவியின் உடல் செல்லும் ஆம்புலன்ஸ் முன்னே அமைச்சர் சி.வி.கணேசனும் தனது காரில் செல்கிறார்.
இந்நிலையில், வேப்பூர் அருகே செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் சிறு விபத்துக்குள்ளானது. ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆம்புலன்ஸின் முகப்பில் சிறிது சேதம் ஏற்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டது.
மாணவியின் இறுதிச்சடங்கையொட்டி அசம்பாவிதத்தைத் தவிர்க்க, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் குறிப்பாக பெரியநெசலூர் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நான்கு அடுக்கு சோதனைச் சாவடி, இறுதிச் சடங்கில் உள்ளூர் கிராம மக்களுக்கு மட்டுமே அனுமதி என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.