குரூப் 4 தேர்வு 84 சதவீதம் போ் பங்கேற்பு: டிஎன்பிஎஸ்சி
தமிழகம் முழுவதும் குரூப் 4 தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 7,301காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற இந்தத் தோ்வை 84 சதவீதம் போ் எழுதியுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
குரூப் 4 தோ்வுக்கான அறிவிக்கை கடந்த மாா்ச் 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக குரூப்- 4 தோ்வானது, கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்களைச் சோ்த்தே நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான குரூப்- 4 தோ்விலும் கிராம நிா்வாக அலுவலா் காலிப் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன்படி, 274 கிராம நிா்வாக அலுவலா் பணியிடங்கள், 3,678 இளநிலை உதவியாளா் பணியிடங்கள், 50 வரித் தண்டலா், 2,108 தட்டச்சா் பணியிடங்கள், 1,024 சுருக்கெழுத்து தட்டச்சா், ஒரு பண்டகக் காப்பாளா் என 7,138 காலிப் பணியிடங்களும், பல்வேறு வாரியங்களில் 163 காலிப் பணியிடங்கள் என மொத்தம் 7,301 காலிப் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை தோ்வு நடைபெற்றது. தமிழ் மொழியில் இருந்து 100 கேள்விகளும், பொது அறிவு, அறிவுக்கூா்மை பகுதி என்று 100 கேள்விகள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற்றது.
இதையும் படிக்க | இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது: வைகோ கண்டனம்
இதுவரை நடந்த குரூப்- 4 தோ்வுகளில் அதிகபட்ச அளவில் 22 லட்சத்து 2 ஆயிரத்து 942 போ் விண்ணப்பித்திருந்த இந்தத் தேர்வை, 18.50 லட்சம் பேர் எழுதியதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி மற்றும் மதிப்பீட்டு பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும், யுபிஎஸ்சி தேர்வுக்கு கேட்கப்படும் கேள்விகள் போல் மறைமுக வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டதாகவும் தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் தொகை திட்டம், உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்பட்ட நிலையில், அரசால் கைவிடப்பட்ட திட்டம், செயல்பாட்டில் உள்ளது போல் கேட்கப்பட்ட கேள்வி தேர்வர்கள் குழப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளனர்.