சேலம்: தகாத முறையில் நடந்து கொண்டதாக ஆராய்ச்சி மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் சாதி ரீதியான கேள்வி தாள்கள் இடம் பெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பாலியல் புகாரில் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பொறுப்பில் கோபி என்பவர் நியமிக்கப்பட்டார். பொறுப்பு பதிவாளராக பணியமர்த்தப்பட்ட அவர், அதே பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவி ஒருவரை ஞாயிற்றுக்கிழமை வகுப்பு இருப்பதாக கூறி பல்கலைக்கழகத்திற்கு அழைத்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து மாணவி மற்றும் அவருக்கு துணையாக தனது உறவினர் ஒருவரை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அப்போது உறவினரை வெளியில் இருக்க சொல்லிவிட்டு மாணவியை மட்டும் தனது ஓய்வு விடுதிக்கு வரவழைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து மாணவி சிறிது நேரத்திற்கு பிறகு பதட்டத்துடன் வெளியே வந்துள்ளார். அப்போது வெளியில் காத்திருந்த உறவினர் மாணவியிடம் விசாரித்துள்ளார். அப்போது மாணவி, பதிவாளர் தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்த முயற்சி செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர், கோபத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் பதிவாளர் அறைக்குச் சென்று கோபியை சராமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால், நிலைக்குலைந்துபோன பதிவாளர் கோபி, உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அடையாளம் தெரியாத மூன்றுபேர் தன்னை தாக்கியதாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது பல்கலைக்கழகத்தில் பயிலும் ஆராய்ச்சி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததால், இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் உடனடியாக பதிவாளரை அதிரடியாக கைது செய்தனர்.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக பதிவாளரே பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.