சென்னை: வீடுகள் மற்றும் குடிசை வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்த கட்டணம் வசூலிக்கப்படாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும், அடித்தட்டு மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்கான மின் அளவீட்டில் உயா்த்தப்பட்டுள்ள இந்த கட்டண நடைமுறைக்கான பரிந்துரைகளை மின்சார ஒழுங்கு ஆணையத்திடம், தமிழ்நாடு மின்வாரியம் அளித்துள்ளது. இதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்பட்டது.
வீட்டு பயன்பாட்டுக்கான மின்சாரத்தில் 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் மொத்தம் ரூ.1,130 வசூலிக்கப்படுகிறது. ஆனால், மின் நுகா்வானது 500 யூனிட்டில் இருந்து 501 ஆக அதிகரிக்கும் போது மின் கட்டணத் தொகையானது ரூ.1,786 ஆக வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: நாடாளுமன்றத்தில் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி தர்னா
500 யூனிட்களுக்கு மேல் ஒரு யூனிட் கூடுதலாகப் பயன்படுத்தினாலும் ரூ.656.60 கூடுதலாகச் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வேறுபாடுகள் முற்றிலும் களையப்பட்டு ஒரே மின் கட்டணமாக மாற்றியமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.