செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ள வீரர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நாளை (ஜூலை 28) முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 187 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள், நடுவா்கள், பயிற்சியாளா்கள் பங்கேற்க உள்ளனா். இந்தப் போட்டிகள் அனைத்தும் நேரலையிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்நிலையில் மாமல்லபுரத்திற்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி நடைபெறவுள்ள அரங்குகளைப் பார்வையிட்டார். முன்னதாக மாமல்லபுரத்தின் நுழைவுவாயிலில் அமைக்கப்பட்டுள்ள 45 அடி உயர சிற்பக்கலைத் தூணையும் முதல்வர் திறந்துவைத்தார்.
அதனைத் தொடர்ந்து அரங்குகளை பார்வையிட்ட முதல்வர், இந்தியா சார்பில் ஆண்கள், பெண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள அணிகளின் வீரர்க்ளை சந்தித்து கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர்களுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை ராஜாமுத்தைய்யா சாலையில் அமைந்துள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.