கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.
தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. இங்கு நாள்தோறும் தமிழக கேரள பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மற்றும் இறைவழிபாடு நடத்தி புனிதநீர் எடுத்துச் செல்லவும், காதணி விழா, முடி காணிக்கை, முன்னோர் தர்ப்பணம் போன்ற வழிபாடுகளையும் நடத்தவும் வந்து செல்கின்றனர்.
தமிழ் மாதங்களான தை மற்றும் ஆடி மாதங்களில் வரும் அமாவாசை நாள் அன்று இறந்த தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பு என்பதால் அந்த நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.
இதையும் படிக்க | 'என்எல்சி பொறியாளர் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை'
வியாழக்கிழமை ஆடி அமாவாசை நாளை முன்னிட்டு அதிகாலையே ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து, அருவியில் நீராடி, பின்னர் அங்குள்ள, வள்ளுவர் மற்றும் குருக்களிடம் தர்ப்பணம் செய்தும், அன்னதானம் வழங்கினர்.
மேலும், குலதெய்வ வழிபாடுகள் செய்ய கைலாய நாதர் குகைக் கோயிலுக்கு சென்று, புனித தீர்த்தம் எடுத்து சென்றனர். கைலாயநாதர் குகை கோயிலில் அன்னதானம் நடைபெற்றது.