இன்று வேலூர் கோட்டையில்... நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்...!

2006 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில் விதிமுறைகளை மீறாமல் ஒரே வரியில் 2 நிமிடத்தில் கருணாநிதி பேசி அசத்தினார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

2006 ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  திமுக தலைவர் கருணாநிதி பிரசாரம் செய்ய வேலூர் கோட்டைக்கு வருகை தந்தார். அப்போது அவர் மேடைக்கு வந்தபோது, இரவு 9.55-ஐ தாண்டிவிட்டது. சில நிமிடங்கள்தான் இருந்தன. அப்போது, கருணாநிதி என்னப் பேசுவார் என்று ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தார்.

அவர், இன்று வேலூர் கோட்டையில்.. நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்..' என்று ஒரே வரியில் 2 நிமிடத்தில் பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதன்பின்னர், 2008-இல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற வேலூர் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தும் விழாவில் பங்கேற்க முதல்வராக வந்த கருணாநிதி, இதை நினைவுபடுத்தியும் காட்டினார்.

தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி கருணாநிதி!

ஆட்சிக் கட்டிலில் இருந்தாலும் எதிரணியில் தொடர்ந்தாலும் புகழ்க் கடலில் மூழ்கி,விமர்சன முத்துகளால் வெளியே வந்தவர் அவர். பொது வாழ்வில் தலைமுறைகள் தாண்டியும் வலம் வந்தவர்.

* டி.எம்.கருணாநிதி என்றுதான் தன்னை அழைத்துக்கொண்டார் (திருவாரூர் முத்துவேலர்), பிறகு, மு.கருணாநிதி என்று கையெழுத்துப் போட்டார். பின்னர், மு.க. இருப்பினும், அனைவராலும் அழைக்கப்படுவது கலைஞர் அல்லது தலைவர்.

* உடல்நலம் பாதிக்கப்படும் வரை, அதிகாலையில் எழுந்ததும் அண்ணா அறிவாலயம் சென்று நடைப் பயிற்சி செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார் கருணாநிதி. முதுகு வலி ஆபரேஷனுக்குப் பிறகு வாக்கிங் நின்றுவிட்டது!

* கருணாநிதிக்குப் பிடித்தது  வேட்டிதான்.

*அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிட்டவர். செரிமானத்தில் பிரச்னை இருந்ததால், சைவமே பெரும்பாலும் சாப்பிட்டார்.  கீரை கட்டாயம் இருக்க வேண்டும். மற்றபடி இட்லி, சாதம், சாம்பார் வகையறாக்கள் விருப்பமானவை. ஆற்காடு பிரியாணி கருணாநிதிக்கு ரொம்பவும் பிடிக்கும். 1990 - களில் பல முறை பிரியாணி ஆற்காட்டில் இருந்து காரில் சென்னைக்கு பயணித்துள்ளது.

* 1960-களில் திமுக தேர்தல் செலவுக்கு எதிர்பாராத வகையில் ரூ.11 லட்சம் வசூலித்துத் தந்து, அண்ணாவின் பாராட்டையும் பெற்றார்.

*சின்ன வயதில் ஆர்வமாக விளையாடியது ஹாக்கி.  கிரிக்கெட் பார்ப்பதில்தான் அதிக ஆர்வம்!

*"வீரன் ஒருமுறைதான் சாவான். கோழை பலமுறை சாவான்' என்பது புகழ்பெற்ற பொன்மொழி. அதை கருணாநிதி,  "வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை' என்று மாற்றிப் பிரபலப்படுத்தினார்.

*ஆரம்பத்தில் மறவன் மடல் என்று எழுதி வந்த கருணாநிதி, அண்ணா மறைவுக்குப் பிறகுதான் 'உடன்பிறப்பே' என்று தலைப்பிட்டு கடிதங்கள் எழுத ஆரம்பித்தார்.

* பதில் அளிக்க இயலாத கேள்விகளுக்கு எதிர்க்கேள்வி போடுவது அவரது பாணி.  "ஆண்டவனை ஏற்றுக்கொள்கிறீர்களா?' என்று ஒரு முறை கேட்கப்பட்டது.  "அது பிரச்னை அல்ல. ஆண்டவன் நம்மை ஏற்கிறானா?'  என்றுதான் பார்க்க வேண்டும்' என்று திருப்பி கேட்டார்.

* கருணாநிதி 100 - க்கும் மேலான படங்களுக்கு கதை - வசனம் எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு அதிகம் பிடித்த வசனம், "மனச்சாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது'.

* சிறுகதை, நாவல், நாடகங்கள், கவிதைகள், திரைக்கதை, வசனங்கள், பாடல்கள் கார்ட்டூன் என எதையும் விட்டுவைத்ததில்லை கருணாநிதி.

* 'தென்றலைத் தீண்டியதில்லை, ஆனால், தீயைத் தாண்டியிருக்கிறேன்', 'கோயில் கூடாது என்பதற்காக அல்ல, அது கொடியவர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது',  வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்' - கருணாநிதி சொல்லிய பிரபலமான வாக்கியங்கள்!

* 12 முறை எம்.எல்.ஏ., 5 முறை முதல்வர், 10 முறை தி.மு.க. தலைவர், 1 முறை எம்.எல்.சி.  என்பது மாதிரியான சாதனை இதுவரை யாரும் செய்ததில்லை. இனியும் முடியுமா என்பது சந்தேகம்தான்!. எந்தத் தேர்தலிலும் தோல்வியைத் தழுவாதவர்.

* சிக்கலான நேரங்களில்  நள்ளிரவிலும் தலைமைச் செயலகத்தில் அமர்ந்திருப்பார்.

*படுக்கையில் உட்கார்ந்து கிளிப் அட்டையில் வெள்ளை காகிகத்தில் வைத்து எழுதுவதுதான் அவரது வழக்கம். உயரத்துக்காக இரு தலையணைகள் உண்டு.
- மை பேனாவைத்தான் பயன்படுத்தினார்.

*கோபாலபுரம், சி.ஐ.டி. நகர், தலைமைச் செயலகம், அறிவாலயம், முரசொலி ஆகிய 5 இடங்களிலும் அன்றைய செய்தித்தாள்கள் கருணாநிதிக்காகவே காத்திருக்கும்.

*கடற்கரை மணலில் உட்கார்ந்து காற்று வாங்கியபடி பேசுவதுதான் கருணாநிதிக்குப் பிடிக்கும். அது முடியாததால், மாமல்லபுரம் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் கடலைப் பார்த்த அறையில் அடிக்கடி தங்கியுள்ளார். 2008 - இல் ஒருமுறை ஜோலார்பேட்டை அருகேயுள்ள ஏலகிரி மலையில் சில நாள்கள் தங்கியிருந்ததும் உண்டு.

*கருணாநிதிக்குப் பிடித்த தமிழ்க் காப்பியம் சிலப்பதிகாரம், பிடித்த புராணம் மகாபாரதம். எப்போதும் மேஜையில் வைத்திருப்பது திருக்குறள்.

*தனிமை பிடிக்காது. எப்போதும் நண்பர்கள் புடைசூழ இருப்பது கருணாநிதிக்கு உண்டான குணம். 'சாமானியனையும் முன்னணி தலைவராக்கும், அமைச்சராக்கும், மக்கள் பிரதிநிதியாக்கும் உள்ளாட்சி தலைவராக்கிய ஆக்கி கொண்டிருக்கும் இயக்கம் திமுக - ஜனநாயக இயக்கம் செயற்குழு பொறுப்பு கூட தேர்தலில் போட்டியிட்டே வர முடியும்' என்று கருணாநிதி அவ்வப்போது சொல்வதுண்டு.

* வேட்புமனு செய்ய காசில்லாதவருக்குக்கூட போட்டியிட வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி.  பண, படை பலம் படைத்தவர்களைக் கூட சாமானியர்களை வேட்பாளர் ஆக்கி வெற்றி பெற வைத்தவர் கருணாநிதி. 

(ஜூன் 3 - மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com