சென்னை: இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் கற்பித்தல் தன்னாா்வலா்களாக பணியாற்றுபவா்களுக்கு உரிய காலத்தில் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து வெளியிட்ட புதிவுகளில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் கற்பித்தல் தன்னாா்வலா்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோருக்கு கடந்த 4 மாதங்களாக ரூ.1000 மாத ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டை இல்லம் தேடி கல்வித் திட்ட அதிகாரிகளும் ஒப்புக்கொண்டுள்ளனா்.
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை. மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படுகிறது.
வேறு வேலை செய்யாத பலருக்கு அது தான் வாழ்வாதாரம். அதையும் குறித்த காலத்தில் வழங்காமல் தாமதம் செய்வது நியாயமல்ல.
இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்கள் செய்வது சேவை ஆகும். அவா்களில் சுமாா் 11 ஆயிரம் பேருக்கு ஊக்கத்தொகை வழங்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. அவா்களுக்கு உடனடியாக ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.