புதுச்சேரியில், தேசிய மாணவர் படை இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும் கடற்படைப் பிரிவு மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் திங்கள்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தட்சிணாமூர்த்தி மற்றும் தேசிய மாணவர்ப் படை அதிகாரிகள் உடனிருந்தனர்.
புதுச்சேரி-தமிழகத்தைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட 60 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த குழு 300 கிமீ கடற் பயணமாக, புதுச்சேரியிலிருந்து திங்கள்கிழமை புறப்பட்டு காரைக்காலை அடைந்து மீண்டும் புதுச்சேரியை வந்தடையும்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை: கடல் சாகசப் பயணத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் கடற் பயணம் செல்வது மட்டுமல்லாமல் கடற்கரையோர கிராமங்களில், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரத்த தான முகாமில் கலந்த கொள்ளுதல், முதியோர் இல்லங்களைப் பார்வையிடுதல், மரங்கள் நடுதல், கடற்கரையை தூய்மைப்படுத்துதல், விழிப்புணர்வு பேரணிகள் நடத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த கடற்பயணக் குழவில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கிறார்கள் என்பதும் கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.
கடற்படை, மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. குடியரசு நாளன்று பிரதமரின் கரங்களால் வழங்கப்படும் சிறந்த அணிவகுப்பிற்கான கோப்பையை புதுச்சேரி கடற்படைப் பிரிவு பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்தில் கடற்படைப் பிரிவு மாணவர்களின் கடல் சாகசப் பயணத்தை, கொடியசைத்துத் தொடங்கி வைத்த தமிழிசை சௌந்தராஜன்.
புதுச்சேரியில் ஒரு முறை பயன்பாட்டு நெகிழி (பிளாஸ்டிக்) தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், கடந்த இரண்டு மூன்று நாள்களாக பொது இடங்களில், பல லட்சத்துக்கு மேற்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை அப்புறப்படுத்தி கொண்டிருக்கிறோம்.
நெகிழி பூமிக்கு மிகவும் பாரமாக இருக்கிறது. சுற்றுச்சூழல் நாளை கொண்டாடும் சூழலில், நெகிழி இல்லாத உலகமே வருங்கால சந்ததியினருக்கு நாம் அளிக்கும் ஆரோக்கியமான பரிசாக இருக்கும்.
சென்னையிலிருந்து சொகுசு கப்பல் புதுச்சேரி வருகை குறித்து நமக்கு தகவல் ஏதும் இல்லை. தொடர்பான எந்த கோப்பும் வரவில்லை. அதில் சூதாட்டம் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வந்துள்ளது. எனினும், கலாசார பாதிப்புக்கு உரிய எந்த நடவடிக்கையும் புதுச்சேரி அரசு அனுமதிக்காது என்றார் ஆளுநர் தமிழிசை.
இதையும் படிக்க | தமிழகத்தில் 9-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி?