
தலைமைச் செயலர் வெ.இறையன்பு
பள்ளிகளை தூய்மைப்படுத்த வேண்டும் எனவும், அதற்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடன் நிதி வசூல் செய்யக் கூடாது என்றும் தலைமைச் செயலர் வெ.இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. கரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் பள்ளிகள் முழுமையாக செயல்படாத நிலையில், இந்த கல்வியாண்டில் முழுமையாக செயல்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் எழுதிய கடித்தத்தில்,
“பள்ளிகள் தூய்மைப்படுத்தும் பணியை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை புதுப்பொலிவுடன் சீரமைத்து மாணவர்கள் வருகைக்காக தயார்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் உள்ள கரும்பலகைகளுக்கு பெயிண்ட் அடிப்பது, உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆய்வகங்களை சரிசெய்ய வேண்டும்.
பள்ளி வளாகங்களில் உடைந்த இருக்கைகள் இருந்தால், அதை அகற்ற வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார்வலர்களுடன் இணைந்து தூய்மைப் பணியை மேற்கொள்ளலாம்.
இப்பணிகளுக்காக பெற்றோர் ஆசிரியர் கழகம் உள்ளிட்டவர்களிடம் இருந்து எந்தவொரு நிதியும் வசூல் செய்யக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.