ஆன்லைன் விளையாட்டால் தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவரின் உறவினர் மகனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் விளையாட்டை தடை செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய அன்புமணி ராமதாஸ், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தமிழகத்தில் 23 உயிர்களை நாம் இழந்துள்ளோம்.
ஆன்லைன் ரம்மியால் பணம், நகை உள்ளிட்ட உடமைகளை இழந்து கடன் ஏற்பட்டு சமூகத்தில் ஏற்படும் அவமானம் காரணமாக தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்திற்கே விஷம் குடித்து தற்கொலை செய்யக் கூடிய நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. தமிழ்நாட்டில் முக்கிய அரசியல் தலைவரின் உறவினர் பெரும் வசதிபடைத்தவர். அவருக்கு ஒரே ஒரு மகன். பள்ளி படித்து வந்தான். அவருடையை மகன், ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பின்னர் கடனை வாங்கி அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டான்.
இதையும் படிக்க- பி.எஃப். கணக்கில் எவ்வளவு இருக்கிறது? வீட்டிலிருந்தே அறியலாம்
ஏழை, நடுத்தர, பணக்காரர்கள் என அனைத்து வர்க்கத்தினரையும் பாதிக்கின்ற ஆன்லைன் விளையாட்டை அரசு உடனடியாக தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் இந்த தாமதம்? என்ன காரணம்? அரசுக்கு வருகின்ற வருமானமா? கடந்த ஆண்டு ஆன்லைன் சூதாட்டத்தின் மூலமாக 10 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அந்நிறுவனம் சம்பாதித்துள்ளது. அதில் மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியாக 3,000 கோடி கிடைத்துள்ளது.
இந்த ஆண்டு அந்நிறுவனத்தின் வருவாய் 15 ஆயிரம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கிறார்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலத்தில் 40 ஆயிரம் கோடியாக உயரும் என்றும் சொல்கிறார்கள். இந்த 40,000 கோடி யாருடைய பணம்? சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுடைய பணம். நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு இரண்டு வாரம் வரை காத்திருக்காமல் 2 நாள்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு உடனடியாக அறிக்கையை சமர்ப்பித்து அவசர சட்டம் கொண்டு வர வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஆன்லைன் விளையாட்டை தடை செய்வதற்கு அவசர சட்டத்தை உருவாக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் சிறப்பு சட்டக்குழுவை அமைத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.