
கோப்புப்படம்
விருது நகர் மாவட்டம், வச்சக்காரபட்டி அருகில் உள்ள தடங்கம் கிராமத்தில் நள்ளிரவில் சந்தனக்குமார் (22), மணிகண்டன் (18) என்ற நண்பர்கள் இருவரை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளியை வச்சக்காரபட்டி போலீசார் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம், வச்சக்காரபட்டி அருகிலுள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தனக்குமார்(22), இவருடையை நண்பர் மணிகண்டன்(19) அதே பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகின்றனர். சந்தனக் குமாரின் தந்தையுடன் பிறந்தவரின் மகனான மற்றொரு மணிகண்டன்(26) என்பவருக்கும் சந்தன குமாருக்கும் ஆடு மேய்க்கும் தொழிலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு சந்தனகுமார் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த உறவினர் மணிகண்டன் சந்தனகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறி உள்ளது. திடீரென கையிலிருந்த அரிவாளால் சந்தன குமார் மற்றும் அவரது நண்பர் மணிகண்டனை சரமாரியாக வெட்டியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கொலை செய்த மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இச்சம்பவம் குறித்து கிராமத்தினர் வச்சக்காரபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து வந்த காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இரட்டை கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர்.
உறவினர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் நண்பர்கள் இருவரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | ஆன்லைன் ரம்மி தடைக்கு விரைவில் அவசர சட்டம்: நீதிபதி தலைமையில் குழு
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...