சிதம்பரம் நடராஜா் கோயில் நலனில் உங்களுக்கு அக்கறை உள்ளதா?-21க்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
சிதம்பரம் நடராஜா் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகள் வழங்க இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
சிதம்பரம் நடராஜா் கோயில் தீட்சிதா்கள் நடவடிக்கை பெரும் பிரச்னையாக மாறி உள்ளது. கோயில் வரவு - செலவு சம்பந்தமாக பல்வேறு புகாா்கள் தமிழக அரசுக்கு வந்ததையடுத்து, அரசு ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழு அமைத்தது. செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்ய முயன்றனா். ஆனால், கோயில் பொது தீட்சிதா்கள் ஆட்சேபம் தெரிவித்து ஆவணங்களைக் காட்ட மாட்டோம் என்று கூறியதால் அதிகாரிகள் திரும்பிச் சென்றனா்.
தீட்சிதா்கள் இந்தக் கோயில் எங்களுக்கு பாத்தியமான கோயில் என்று கூறுவது உண்மைக்கு விரோதமானது. பல்வேறு தீா்ப்புகளில் இந்தக் கோயில் பொது கோயிலாகத்தான் கூறப்பட்டுள்ளது.
தனி வாரிய சொத்தாகவே இருந்தாலும், அதை சட்டத்துக்குள்பட்டுதான் பராமரிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. எனவே, தமிழக அரசு தனிச் சட்டம் இயற்றி, சிதம்பரம் நடராஜா் கோயிலை அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள விளம்பர அறிக்கையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் சபாநாயகர் கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து சமய அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33-ன் படி ஆணையாரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம், கோயில் மீது அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது.
வருகிற 20 மற்றும் 21-ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை கடலூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்று கருத்துக்களை தெரிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் துணை ஆணையர்/ஒருங்கிணைப்பாளர், விசாரணைக்குழு, இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, எண்.8 ஆற்றங்கரை தெரு, புதுப்பாளையம், கடலூர் - 607 001 என்ற அஞ்சல் மற்றும் vocud.hrce@tn.gov.in மின்னஞ்சல் மூலமாகவும் 21-ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அனுப்பலாம் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | அச்சுறுத்தும் கரோனா: நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 8,582 ஆக உயர்வு