மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வைகாசி விசாக உற்சவம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு விழாக்களில் ஒன்றான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரகணக்கான பக்தர்கள் பால்குடம் சுமந்து வந்து “அரோகரா" கோஷம் முழங்கிட சுவாமி தரிசனம் செய்தனர் .
முன்னதாக அதிகாலையில் சண்முகர் சன்னதியில் எழுந்தருளிய ஆறுமுகங்களை கொண்ட சண்முகர் மற்றும் வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பாலாபிஷேகமும், தொடர்ந்து கோயில் விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளிய சண்முகர், வள்ளிக்கு தங்கக் குடத்தில் பால் அபிஷேகமும் நடத்தப்பட்டது.
மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் கொண்டு வந்த பால்குடங்கள் மூலமும் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.
பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு மதுரை மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பறவை காவடி , இளநீர்காவடி . புஷ்பகாவடி , பன்னீர் காவடி ஆகியவை எடுத்து வந்து “அரோகரா" கோஷம் முழங்கிட முருகப்பெருமானை தரிசித்தனர்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த வைகாசி விசாகத் திருவிழா இந்த ஆண்டு நடைபெறுவதால் மதுரை உள்ளிட்ட அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றம் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திருப்பரங்குன்றம் மற்றும் சுற்று மலைப்பகுதிகள் எங்கும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதையும் படிக்க |திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா!