மணப்பாறை அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்புறம் வந்த லாரி மோதியதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்தனர், காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
திருநெல்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றுக்கொண்டு புதன்கிழமை இரவு பெண்ணாடம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. லாரியை தூத்துக்குடி குமாரரெட்டியபுரத்தை சேர்ந்த பாபுராஜ்(37) ஓட்டி வந்துள்ளார். இயற்கை உபாதைகளை முடிப்பதற்காக, புதன்கிழமை காலை மணப்பாறைக்கு முன்னதாக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலை சொரியம்பட்டிவிளக்கு என்னுமிடத்தில் சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார்.
அப்போது, திருநேல்வேலியிலிருந்து சிமென்ட் கற்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கிச் சென்ற ஈச்சர் லாரி, சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த பாபுராஜ் லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், ஈச்சர் லாரியினை ஓட்டி வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அனங்க பிரதான்(29) மற்றும் அருகில் அமர்ந்து இருந்த ஜெய் போக்தா(34) ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஈச்சரில் இருந்த சனந்த போகி(27) படுகாயமடைந்தார்.
சாலையோரம் நின்றுக்கொண்டிருந்த பாபுராஜ் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளான ஈச்சர் லாரி
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறை வீரர்கள் இடர்பாட்டில் சிக்கி இருந்த உடலைகளை மீட்டனர். காயமடைந்த சனந்த போகி ஆம்புலன்ஸ் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வளநாடு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.