'அக்னிபத்' போராட்டத்தையடுத்து தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் (நடைமேடை) டிக்கெட் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் 'அக்னிபத்' திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ரயில்களை எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, இன்று நாடு தழுவிய 'பாரத் பந்த்' போராட்டத்திற்கு அக்னிபத் போராட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் ரயில் நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அக்னிபத் போராட்டத்தை அடுத்து, பயணிகளின் பாதுகாப்பு கருதி தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சென்னை கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம்(நடைமேடை) டிக்கெட் வழங்குவது மறுஅறிவிப்பு வரும்வரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே- சென்னை கோட்டம் அறிவித்துள்ளது.