அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என்ற ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கையை ஆவடி காவல் துறை நிராகரித்தது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் தனி நபரின் உள் அரங்கத்தில் நடப்பதால் அதில் தலையிட முடியாது என ஆவடி காவல் துறை விளக்கம் அளித்துள்ளது.
காவல் துறையினரின் இந்த பதிலைப் பொறுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அதிமுக பொதுக்குழு கூட்டம் கட்டாயம் நடைபெறும் என த் தெரிகிறது.
சென்னை வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி தரக்கூடாது, பாதுகாப்பு தரக்கூடாது என வலியுறுத்தி ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து நேற்று ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மனு மூலம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
தற்போது ஓ.பி.எஸ். தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட மனுவை ஆவடி காவல் ஆணையரகம் மறுத்துள்ளது.
பொது இடத்தில் நடந்தால் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி தரவோ, மறுக்கவோ முடியும் எனவும் சுட்டிக்காட்டிய காவல் துறை, தனி நபரின் உள் அரங்கத்தில் நடப்பதால் அதில் தலையிட முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது.
இதனால் உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் என ஆணையரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.