அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில், தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு வியாழக்கிழமை அதிகாலை விசாரித்தது.
இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதேசமயம், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு கூட்டத்துக்கு வருவார் என அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பெரும் பரபரப்புக்கு மத்தியில் தொடங்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்தில் உள்ள மண்டபத்திற்கு அதிகயளவில் அதிமுக தொண்டர்கள் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்களில் மூலம் வரத் தொடங்கியுள்ளனர்.
இதனால் மதுரவாயல்-வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.
கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்யும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு நடைபெறும் உள்ள வானகரத்திற்கு புறப்படுவதற்கு முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தங்களது வீட்டில் தனித்தனியாக கோ பூஜை, சிறப்பு யாகம் நடத்தினர்.
பின்னர், பொதுக்குழு கூட்டம் நடைபெறும் வானகரத்திற்கு ஓபிஎஸ், இபிஎஸ் புறப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | ஒற்றைத் தலைமை முடிவில் மாற்றமில்லை: ஜெயகுமார் பேட்டி