கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதில் தனக்கு ஆர்வம் அதிகம் என்றும் எத்தகைய பணிச்சூழலிலும் கிரிக்கெட் பார்ப்பதைத் தவறவிடமாட்டேன் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 'ஸ்போர்ட்ஸ்டார்' - தென்னக விளையாட்டு மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார்.
அதில் பேசிய அவர், 'தமிழ்நாடு அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் மேம்பட்டு விளங்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறோம். அதில் ஒரு முக்கியமான துறை தான், விளையாட்டுத் துறை. அத்தகைய விளையாட்டுத் துறையிலும் முன்னோக்கிய பாய்ச்சலில் தமிழ்நாடு இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது.
நானும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் உள்ளவன்தான். கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதை நான் தவற விடமாட்டேன். பள்ளிக் காலம் முதல் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கக்கூடியவன். மேயர் ஆனபோதும் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு நான் விளையாடி இருக்கிறேன்.
எத்தகைய பணிச்சூழல்கள் இருந்தாலும் மறைந்த நம்முடைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும் கிரிக்கெட் போட்டிகளைத் தவறாமல் பார்த்துவிடுவார்கள்.
விளையாட்டுப் போட்டிகள் என்பது, விளையாடுபவர்களை மட்டுமல்ல, போட்டிகளை பார்ப்பவர்களையும் உற்சாகம் ஊட்டக்கூடிய வகையில் அது அமைந்திருக்கிறது. அதேபோல் விளையாடுபவர்களை ‘விளையாட்டு வீரர்கள்’ என்று சொல்கிறோம்.
அத்தகைய கம்பீரமான துறைதான் இந்த விளையாட்டுத் துறை. இத்தகைய விளையாட்டுத் துறையில் ஏராளமான முன்னெடுப்புகளை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது' என்று பேசியுள்ளார்.