சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் ஒரு வீட்டிற்கு புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் விற்பனை செய்ய லாரியில் கொண்டு வரப்படுவதாக சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு லாரியை மறித்து சோதனையிட முயன்றனர். இதனை அறிந்த லாரியை தொலைவில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடினார்.
விரைந்து சென்ற போலீசார் லாரியை திறந்து சோதனையிட்டதில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து 90 பெட்டிகளில் 4300 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மதுபாட்டில்களுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டதில் தொடுவாய் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரியை கங்கா என்பவருக்கு காரைக்காலில் இருந்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து கங்காவை கைது செய்த மதுவிலக்கு போலீசார் தப்பி ஓடிய மற்றொரு சாராய வியாபாரியான முகேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.