உக்ரைனில் சிக்கிய தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவச் செல்வங்களை மீட்ட பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடபபாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷியாவின் போரை அடுத்து அங்கு சிக்கியிருக்கும் தமிழக மாணவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசு சார்பில் திமுக எம்.பி. திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி ஆகியோர் அடங்கிய சிறப்புக்குழு நியமிக்கப்பட்டு அவர்கள் நேரடியாக உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சென்றனர். அவா்களுடன் தமிழக அரசுத் துறை உயரதிகாரிகள் நான்கு பேரும் சென்றனர். தமிழக மாணவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இன்று உக்ரைனில் இருந்து கடைசி குழு தமிழகம் வந்துள்ளது.
இதையும் படிக்க- காஷ்மீர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இந்த நிலையில், உக்ரைனில் சிக்கிய தமிழகம் உள்ளிட்ட இந்திய மாணவச் செல்வங்களை மீட்ட பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடபபாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மருத்துவம் மற்றும் உயர்கல்வி பயில உக்ரைன் சென்ற அனைத்து மாணவர்களையும் குறிப்பாக தமிழக மாணவச்செல்வங்களை கடும் போர் சூழலில் இருந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகம் அழைத்து வந்த பிரதமர் மோடிக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் தமிழக மாணவர்கள் சார்பாகவும், எனது சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.