தஞ்சாவூர்: தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை இரவு தப்பியோடிய கைதியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் காந்தி சந்தை அருகேயுள்ள தாரா நல்லூரைச் சேர்ந்தவர் தர்மராஜ் (34). இவர் மீது தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டக் காவல் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி தொடர்பாக 10-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இதில், புதுக்கோட்டையில் நிகழ்ந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு அங்குள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தஞ்சாவூர் காவல் நிலைய வழக்குத் தொடர்பான விசாரணைக்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகேயுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அழைத்துச் சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு புதுக்கோட்டை கிளைச் சிறைக்குக் கொண்டு செல்வதற்காக தர்மராஜை இரு காவலர்கள் அழைத்துக் கொண்டு வெளியே வந்தனர். அப்போது காவலர்களை தள்ளிவிட்டு தர்மராஜ் தப்பியோடிவிட்டார். அவரை இரு காவலர்கள் விரட்டிச் சென்றாலும் அவர் தப்பி தலைமறைவாகி விட்டார்.
இதுகுறித்து தெற்கு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.