பொது வேலைநிறுத்தம்: ஆட்டோக்களில் கட்டணம் உயர்வு; பொதுக்கள் அவதி

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் சாதாரணமாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்ட இடத்திற்கு ரூ.80 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 
பொது வேலைநிறுத்தம்: ஆட்டோக்களில் கட்டணம் உயர்வு; பொதுக்கள் அவதி


மத்திய அரசின் மக்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் திங்கள்கிழமை காலை தொடங்கிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் 70 சதவிகித பேருந்துகள் இயக்கப்படாததால் ஆட்டோக்களில் சாதாரணமாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்ட இடத்திற்கு ரூ.80 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களும் தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும்இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன்படி, நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் பொதுவேலைநிறுத்தப் போராட்டம் இன்று திங்கள்கிழமை காலை தொடங்கியது. வேலைநிறுத்தம் காரணம் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையில் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பாரிமுனை, அண்ணாநகர், ஆவடி, அம்பத்தூர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூர், தாம்பரம், போரூர் போன்ற இடங்களில்  90 சதவிகித பேருந்துகள் இயங்கவில்லை.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்துகள் போதிய அளவு இயக்கப்படாததால் வெளியூர் செல்லும் பயணிகளும் காத்திருக்கின்றனர். விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றுவிட்டு சென்னை திரும்பியர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

பேருந்துகள் குறைந்தளவே இயக்கப்படுவதால் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்களில் மக்கள் கூட்டம் அதிகயளவில் காணப்படுகிறது.

வேலை நிறுத்தம் எதிரொலியாக, சென்னையில் குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் காலை நேரத்தில் பணிக்கு செல்வோர் ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனங்களிலும் பயணம் செய்கின்றனர். அரசு பேருந்துகளை நம்பி வேலைக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வந்தோர் பேருந்துகள் கிடைக்காததால் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில், பொது நிறுத்தத்தால் 90 சதவிகித பேருந்துகள் இயங்கப்படாத நிலையில், சென்னையில் ஆட்டோக்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

சாதாரணமாக ரூ.40 கட்டணம் வசுலிக்கப்பட்ட இடத்திற்கு ரூ.80 வரை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

தமிழ்நாட்டில் பெரும்பாலான மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com