மேட்டூரில் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் காரணமாக, இன்று திங்கள்கிழமை மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஜலகண்டாபுரம் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. ஒன்றிரண்டு தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குவதால் பயணிகள் பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனர்.
மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்துள்ள அழைப்பு காரணமாக அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
அரசு பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார திருத்தச்சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.
வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம்.
ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களும் தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை உள்ளிட்ட சங்கங்களும்இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இப்போராட்டம் காரணமாக இன்று மேட்டூர், மேச்சேரி, நங்கவள்ளி ஜலகண்டாபுரம் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. ஒன்றிரண்டு தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. கடைகள் ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டு இருந்தன. இந்தப் போராட்டம் காரணமாக மேட்டூர் மேச்சேரி நங்கவள்ளி ஜலகண்டபுரம் பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிரண்டு தனியார் பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன.
மேட்டூர் காவல் உகோட்டத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.