பொது வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் தொழிலாளர்கள் கடலில் குதித்து போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சி உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய தொழிற்சங்கங்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில் தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊழியர்கள் யாரும் இன்று செல்லவில்லை. நேற்று பணிக்கு சென்ற ஊழியர்கள் மட்டுமே தற்போது துறைமுகத்திற்குள் உள்ளனர்.
இந்த நிலையில் துறைமுகத்தில் இன்று காற்றாலை இறகுகள் கப்பலில் ஏற்றி அமெரிக்காவிற்க்கு செல்ல தயாராக இருந்த கப்பலை மரைன் பைலட் கப்பலை வெளியே அனுப்ப கயிறு எடுத்துவிடும்படி தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆனால் இன்று வேலை நிறுத்தம் என்பதால் வேலைகள் செய்யமாட்டோம் என கூறினார். பின்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணத்தால் 2 தொழிலாளர்கள் கடலில் குத்தித்து போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.