கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு 60% பங்குத்தொகை வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இன்று இந்து சமய அறநிலையத்துறையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் சேகர்பாபு, முக்கிய அறிவிப்பாக, தமிழகத்தில் திருக்கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு கட்டணச் சீட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான அர்ச்சனைக் கட்டணத்தில் 60% பங்கு தொகை அர்ச்சகர்களுக்கு பங்குத் தொகையாக தரப்படும்' என அறிவித்துள்ளார்.
மேலும், 'திருக்கோயில்களில் நடைபெறும் திருமணங்களில் மணமக்களின் ஒருவர் மாற்றுத்திறனையாக இருப்பின் கட்டணம் ஏதுமின்றியும் திருக்கோயில் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கு வாடகையின்றியும் திருமணங்கள் நடத்திட அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ள திருமணங்களில் மணமக்களுக்கு புத்தாடைகள் திருக்கோயில் சார்பாக வழங்கப்படும்.
ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இலைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினத்தை திருக்கோயில்களே ஏற்கும்' என்றும் அறிவித்தார்.