புவிசாா் குறியீடு பெறுவதற்காகவே ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்பட இருந்த நிலையில் தற்போது அத்திருவிழாவை ஒத்திவைப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் என்றால் தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்பது பலருக்கும் தெரியும். அதற்கு அடுத்தபடியாக ஆம்பூரில் புகழ்பெற்றது பிரியாணி.
ஆம்பூரின் தனித்துவம் பெற்ற பிரியாணி தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்தவா்களிடையே பிரசித்தி பெற்றுள்ளதால் ஆம்பூா் பிரியாணிக்கு புவிசாா் குறியீடு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் நாளை மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிரியாணி திருவிழா நடத்துவதற்கு திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சிலர் மாட்டிறைச்சியில் செய்யும் பீஃப் பிரியாணியும் திருவிழாவில் இடம்பெற வேண்டும் என்றும் விழாவையே தடை செய்ய வேண்டும் என சிலரும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு திருப்பத்தூரில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் விழாவை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது.