இந்த ஆண்டில் தற்போது வரை டெங்கு காய்ச்சலால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
டெங்கு தடுப்பு தினமான இன்று புகைத்தெளிப்பான் வாகனங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர் பாபு ஆகியோர் கொடி அசைத்து தொடக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொசு ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் மூலம் நோய்கள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
எலிசா முறையில் டெங்கு காய்ச்சலைக் கண்டறிய உதவும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை 125ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெங்குவைக் கட்டுப்படுத்த 21,000 களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக ஆட்சியில் டெங்கு பரிசோதனை 42,311 ஆக இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் டெங்கு பரிசோதனைகளின் எண்ணிக்கை 1,73,199ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு 2 லட்சம் பரிசோதனைகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில், தற்போது வரை 5 மாதங்களில் 66 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 2,485 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.