இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக எம்.பி.க்கள் சார்பில் ஒரு மாத ஊதியம் நிதியுதவியாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டது.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டு வருகின்றது.
திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு ரூ. 1 கோடி நிதியுதவி அளிக்கப்பட்ட நிலையில் திமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் சார்பிலும் ஒரு மாத ஊதியம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமான ரூ. 1 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை கடந்த சில தினங்களுக்கு முன்னர் முதல்வரிடம் அளிக்கப்பட்டது.
இன்று, திமுகவின் அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமான 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையை எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். அப்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உடனிருந்தார்.
இதையும் படிக்க | இலங்கை மக்களுக்கு உதவி: திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி