பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு உதவ திமுக சார்பிலிருந்து முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பிறர் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழர் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி அல்லலுறும் இலங்கை மக்களுக்கு உதவிட முதற்கட்டமாக, 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் விரைவில் அனுப்பவுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியமும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.