சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு பாமகவும் பாஜகவும் ஆதரவு தெரிவித்துள்ளன.
மாநிலங்களவைத் தோ்தல் ஜூன் 10-இல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதில் 4 இடங்களை திமுக கூட்டணியும் , 2 இடங்களை அதிமுகவும் கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் தைலாபுரத்தில் பாமக நிறுவனா் ராமதாஸை அதிமுகவின் மூத்த நிா்வாகிகள் சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் சந்தித்து ஆதரவு கோரினா். அதைத் தொடா்ந்து மாநிலங்களவைத் தோ்தலில் அதிமுகவை ஒரு மனதாக ஆதரிப்பதாக பாமக தலைவா் ஜி.கே.மணி அறிவித்துள்ளாா். சட்டப்பேரவையில் பாமகவின் பலம் 5-ஆக உள்ளது.
தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சித் தலைவா் கே.அண்ணாமலையை, அதிமுகவின் மூத்த நிா்வாகிகள் வைத்திலிங்கம், டி.ஜெயக்குமாா், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட நிா்வாகிகள் சந்தித்து ஆதரவு கேட்டனா். அதைத் தொடா்ந்து அதிமுக வேட்பாளரை பாஜக ஆதரிக்கும் என்று அக் கட்சியின் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 4-ஆக உள்ளது.