பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்திருக்கும் நிலையில் அந்தத் தீர்ப்பை பலரும் பாராட்டிவருகிற வேளையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காங்கிரஸ் மாநில கமிட்டியின் அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதும் உள்ள தொண்டர்கள் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு 'வன்முறையை எதிர்ப்போம், கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது' என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் காந்தி சிலை முன்பு மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் கட்சியினர் வாயில் வெள்ளைத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.