தஞ்சாவூர்: தஞ்சையில் நள்ளிரவில் முத்து பல்லக்கில் சாமி வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார். களிமேடு விபத்து எதிரொலியால் பல்லக்குகளின் எண்ணிக்கை பாதியாக குறைந்து 200 ஆண்டுகால திருவிழா களையிழந்து காணப்பட்டது.
தேவாரம் பாடிய நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தர் முக்தி அடைந்த அந்நாளை சம்பந்தர் குருபூஜை விழாவாக ஒவ்வொரு ஆண்டும் தஞ்சையில் கொண்டாடப்படுகிறது.
இந்தாண்டு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவை முன்னிட்டு தஞ்சை நகர பகுதிகளில் அமைந்துள்ள விநாயகர் மற்றும் முருகன் ஆலயங்களில் இருந்து, நள்ளிரவு சுவாமி புறப்பாடாகி மேலவீதி, தெற்கு வீதி உள்ளிட்ட ராஜ வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலித்தார்.
பின்னர், விடியற்காலை அந்த கோயில்களுக்கு பல்லக்குகள் சென்று அடையும். சுமார் 200 ஆண்டுகால இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும். கடந்த 27 ஆம் தேதி தஞ்சாவூர் அருகே களிமேடு தேர் விபத்தால் இந்த ஆண்டு திருவிழா களையிழந்தது.
குறிப்பாக 18 ஆலயங்களில் இருந்து வரக்கூடிய பல்லக்குகள் பாதியாக குறைந்து வெறும் ஏழு ஆலயங்களில் மட்டுமே முத்துப் பல்லக்குகள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | தமிழகத்தில் நிகழாண்டில் 34,239 பேருக்கு காசநோய் பாதிப்பு