கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை’ சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் வேளாண்துறை சார்பில் ரூ.227 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உழைத்தவர் கருணாநிதி. கருணாநிதியின் அனைத்து கிராம வளர்ச்சித் திட்டம், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் செயல்படுத்தப்படும்.
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணியில் இருந்து நாளை தண்ணீர் திறந்து வைக்கிறேன். வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து விவசாயிகளை அரசு பெருமைப்படுத்துகிறது. விவசாயிகளின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக பயிர்க்கடன்கள் வழங்கப்படும். கிராமங்கள் தன்னிறைவு பெறும், நகரங்களை நோக்கி நகர்வது தடுக்கப்படும்.
இதையும் படிக்க- ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் கைது: 15 துப்பாக்கிகள் பறிமுதல்
விவசாயிகள் நலனுக்காக 7 தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி உள்ளோம். 5 ஆண்டுகளில் 12,525 கிராம ஊராட்சிகளில் திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு தயார் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இருபோக சாகுபடியை 20 லட்சம் ஹெக்டேராக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. கருணாநிதியின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தால் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர் என்றார்.