தேசிய விளையாட்டு போட்டி: 3 பரிசுகள் பெற்று கம்பம் காவலர் சாதனை
கம்பம்: தேசிய அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கம்பம் வடக்கு காவல் நிலைய காவலர் பி.மாரியப்பன், 3 பரிசுகளை வென்று சாதனை படைத்தார்.
மத்திய அரசின் மாஸ்டர் கேம் பெடரேசன் சார்பில் ஆண்டுதோறும் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மே 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை கேரள அரசின் மாஸ்டர் அசோசியேசன் ஸ்போர்ட்ஸ் ஆப் கேரளா நடத்தியது.
இதில் மாஸ்டர் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு ( எம்.ஏ. எஸ் டி) சார்பில் தமிழ் நாட்டைச் சேர்ந்த 12 காவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கம்பம் வடக்கு காவல் நிலையத்தைச் சேர்ந்த தலைமை காவலர் பி.மாரியப்பன் குண்டு எறிதல் போட்டியில் இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், வட்டு எறிதல் போட்டியில் மூன்றாமிடம் பெற்று வெண்கல பதக்கத்தையும், சங்கிலி குண்டு எறிதல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தையும் பெற்றார்.
தேசிய அளவிலான போட்டியில் தமிழகம் சார்பில் கலந்து கொண்ட 12 காவலர்கள் மத்தியில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் பி.மாரியப்பன் மட்டும் மூன்று பரிசுகள் பெற்றிருந்தார்.
தேசிய அளவில் சாதனை படைத்த காவலர் பி. மாரியப்பனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார், சக காவலர்களும் பாராட்டினர்.