தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தொண்டர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தொண்டர்களின் மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் மதவாத சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை:

"• மு. கருணாநிதியின் 99-ஆவது பிறந்தநாளை, ஜூன் 3 முதல் தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடத்தி, திமுக ஆட்சியின் சாதனைகளையும், கட்சியின் வரலாற்றையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

• கட்சியின் இளைஞரணி - மாணவரணி – மகளிரணி - தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அமைப்புகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். 

•  இவையெல்லாம் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்பட வேண்டும்.

திமுக ஆட்சி அமைந்த ஓராண்டில்:

• தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன.

• அரசின் நிதிநிலைமை மேம்பட்டுள்ளது.

• பணவீக்கம் குறைந்துள்ளது.

• தேர்தலுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது மக்களிடையே நமக்கு செல்வாக்கு அதிகமாகி இருக்கிறது.

• 'திராவிட மாடல்' என்ற சொல் - தமிழ்நாட்டில் மட்டுமல்ல - மற்ற மாநிலங்களிலும் - இந்தியா முழுமைக்கும் பரவி விட்டது.

தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிடுக:

• தொண்டர்களின் உழைப்பின் காரணமாகவே முதல்வராக நான் இருக்கிறேன். பலரும் அமைச்சர்களாக ஆக்கப்பட்டுள்ளீர்கள் . சட்டப்பேரவை - நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஆகியிருக்கிறீர்கள். கட்சியின் மாவட்டச் செயலாளர்களாக ஆகி இருக்கிறீர்கள். உள்ளாட்சித் தேர்தலின் மூலமாக பலரும் பொறுப்புகளுக்கு வந்துள்ளார்கள்.

• நீங்கள் அனைவரும்தானே கட்சித் தொண்டர்களைக் கவனிக்க வேண்டும்? நீங்கள் தானே தொண்டர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்தாக வேண்டும்?

• கடைக்கோடித் தொண்டனின் தேவையை அந்தப் பகுதியின் அமைச்சரோ - சட்டப்பேரவை உறுப்பினரோ தீர்க்க வேண்டுமா? அல்லது முதல்வராக இருக்கிற நான் தீர்க்க வேண்டுமா?!

• தொண்டன் உழைக்காமல் - நிர்வாகி வேலை பார்க்காமல் - யாரும் வெற்றி பெற்று வந்துவிடவில்லை. நாளைக்கே தேர்தல் வந்தால் - அதே தொண்டன் வீட்டுக்குத்தான் நீங்கள் போயாக வேண்டும்.

• தொண்டர்கள் மனம் நோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

•  கட்சியினரின் கோரிக்கைகளுக்கு உரிய முன்னுரிமை அளித்து அவற்றை நிறைவேற்றி, தேவையான உதவிகளைச் செய்து தந்திட வேண்டும் என்று கண்டிப்புடன் கேட்டுக் கொள்கிறேன். இனிமேல் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்ற செய்தி தான் வர வேண்டும்.

• அமைச்சர்களும், கட்சியின் மாவட்டச் செயலாளர்களும் – பொறுப்பாளர்களும் முழுமையாக கவனம் செலுத்தி தொண்டர்களும், அவர்தம் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதை உறுதிசெய்திட வேண்டும்.  

நாடாளுமன்றத் தேர்தல்:

• இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் முழுமையான வெற்றியை அடைய கவனத்தோடு செயல்பட வேண்டும்.

உட்கட்சித் தேர்தல்:

• கட்சித் தேர்தலில் தகுதி வாய்ந்தவர்களை - தகுதி வாய்ந்த பொறுப்புகளுக்குக் கொண்டு வாருங்கள்.

• உட்கட்சி தேர்தலில் சில இடங்களில் தேர்தல் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டவர்கள் செய்த தவறுகள், கட்சியின் மாவட்டச் செயலாளர்களின் தவறுகள் குறித்து முழுமையான அறிக்கை என்னுடைய கவனத்திற்கு வந்திருக்கிறது.

• தவறுகளைச் செய்தவர்கள் யார் யார் என்று எனக்குத் தெரியும். தவறு செய்தவர்களின் மனச்சாட்சிக்கும் தெரியும்.

• தலைமைக் கழகத்தில் நிர்வாகிகளின் விசாரணைக்கு பிறகு நடவடிக்கைகள் நிச்சயமாக மேற்கொள்ளப்படும்.

• இனி நடைபெறவிருக்கும் கழகத் தேர்தலை மிகக் கவனமாகவும், நேர்மையாகவும் நடத்திட வேண்டும் என்பதில் தலைமைக் கழக நிர்வாகிகளும் மாவட்டச் செயலாளர்களும் உறுதியாக இருக்க வேண்டும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com