நவ.9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளது. நேற்று தமிழ்நாட்டில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து கேரளத்தின் மீது நிலைகொண்டுள்ளது.
இதையும் படிக்க- என்னதான் ஆனது டிவிட்டருக்கு? பயனாளர்கள் கேள்வி
கிழக்கு திசை காற்று, மேற்கு திசை காற்று சந்திக்கும் நிகழ்வு தெற்கு அந்தமான் கடலில் இருந்து தெற்கு அரபிக் கடல் வரை நிலவுகிறது. 9ல் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 10, 11 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது முதலே, பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. நேற்று மாலை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.