மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் கருவிகள் இல்லாத காரணத்தினால் பெரிய துணியைக் கொண்டு தண்ணீரை அகற்றும் விடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வடகிழக்கு பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில் மதுரை மாநகரில் சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்கு மதுரை மாநகராட்சி போதிய முன்னேற்பாடுகளை செய்யாமலும், தாழ்வான பகுதிகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை வெளியேற்றும் உபகரணங்களைக் கொண்டு செல்லாமலும் கால தாமதம் செய்து வருவது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தேங்கும் தண்ணீரை வெளியேற்ற மாநகராட்சி போதிய உபகரணங்களை பயன்படுத்தவில்லை என்பதற்கு சாட்சியாக , எப்போதும் பரபரப்பாக இருக்கும் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேங்கி இருக்கும் மழை நீரை உபகரணங்கள் இல்லாததால் பெரிய துணியைக் கொண்டு மாநகராட்சி ஊழியர்கள் நீரை வெளியேற்றும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்னும் மழைக்காலம் தொடரும் நிலையில் மதுரை மாநகராட்சி போதிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை சந்திக்க வேண்டியதிருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.