சேலம்: சேலம் மாநகராட்சியில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
சேலம் மாநகராட்சி பகுதிகளில் அரசு ஆணை 152 கீழ் மறுசீராய்வு செய்யும் வகையில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது, தனியார் ஒப்பந்த பணியாளர்களை நியமனம் செய்வது, மாநகராட்சியின் அனைத்து நிலையில் உள்ள அடிப்படை பணியாளர்கள் வேலைவாய்ப்பை பறிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக கூறி சேலம் மாநகராட்சியில் அனைத்து நிலைகளிலும் பணிபுரியும் தினக்கூலி மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் நேற்று தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிக்க | 15 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
சேலம் மாநகராட்சி அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த தர்னா போராட்டத்தில் தமிழக அரசு அரசு ஊழியர்களின் காவலனாக இருக்கும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்தற்கு மாறாக மாநகராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அனைத்து பணிகளையும் தனியாருக்கு தாரை வார்க்க முன்வந்துள்ளதாகவும் இதனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் தங்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தங்கள் குடும்பம் மற்றும் வாரிசுகளுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்படும் என்றும் தமிழக அரசு அறிவித்த 152 அரசாணையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
500க்கும் மேற்பட்ட மாநகராட்சி அடிப்படை பணியாளர்கள் ஒன்று திரண்டு மாநகராட்சி வளாகத்தில் தமிழக அரசு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.