சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறுகையில்,
பொதுவாக மழைக்காலங்களில் காய்ச்சல் சார்ந்த நோய்கள் அதிகரிக்கும் என்பதால், தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து 15 மண்டலங்களில் உள்ள 200 வார்களுகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் இன்று தொடங்கப்பட்டுள்ளன.
இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சிறப்பு முகாமை மக்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சென்னையில் உள்ள குடிசைப்பகுதிகள் உள்ள இடங்களில் தினமும் முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு முதலிய மழைக்கால தொற்று நோய்களுக்குத் தேவையான தகுந்த சிகிச்சைகள் வழங்கப்படும்.பொது மக்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் வழங்கப்படும். காய்ச்சல் மற்றும் இதர உபாதைகள் கண்டறியப்படுபவர்கள் மேல் சிகிச்சை தேவைப்படும் நிலையில், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.
மேலும், வடகிழக்கு பருவமழையால் தண்ணீர் தேங்கும் நிலையை ஆய்வு செய்வதில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சாலை சீரமைப்பு பணிகள், வடிகால் அமைப்புகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ஒரே நேரத்தில் செய்து வருகிறோம். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அது செய்து முடிக்கப்படும் என்றார்.