வரும் ஆண்டு பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் திருநாளான தைப் பொங்கல் வரும் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி அதற்கு முன்னதாக நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்கள் தமிழக அரசு சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு திமுக அரசு 23 பொருள்கள் அடங்கிய பொருள்களை மக்களுக்கு வழங்கியது. ஆனால், தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டதாகவும் முறைகேடு நடந்ததாகவும் பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, பொங்கல் தொகுப்புக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 1,000 வழங்க முடிவு செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசு இதுகுறித்து விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.