சென்னை: கானா பாடல் மூலம் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அரசுப் பள்ளி மாணவி ஒருவர் மிக அழகாகப் பாடும் விடியோ ஒன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமீரா ஜாய்ஸ் என்ற சிறுமி, பள்ளிச் சீருடையில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கானா பாடல் ஒன்றைப் பாடியிருந்தார்.
அந்த விடியோ தற்போது பலராலும் பகிரப்பட்டு வந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு, அந்த சிறுமி யார்? எங்கே இருக்கிறார்? என்பது பற்றிய தகவலை காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளத்தில் கோரியிருந்தார்.
இந்த நிலையில், அந்தச் சிறுமியின் தகவல் கிடைத்து, அவரைத் தேடிக் கண்டுபிடித்து சென்னைக்கு வரழைத்து நேரில் பாராட்டியிருக்கிறார் சைலேந்திர பாபு.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கானா பாடல் பாடிய இளங்குயிலைக் கண்டுபிடித்து விட்டோம். 13 வயது ஜாய்ஸ், அவரின் கனவு நனவாக வாழ்த்துகள் என்று சைலேந்திர பாபு தனது முகநூல் பக்கத்திலும் விடியோவுடன் பதிவிட்டுள்ளார்.
கருத்து மிக்க பாடலை பிழையின்றி பாடி அசத்திய சிறுமிக்கும், திறமை எங்கிருந்தாலும் அதனைத் தேடிக் கண்டுபிடித்து பாராட்டியிருக்கும் டிஜிபி சைலேந்திர பாபுவுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.