கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு

கனமழை காரணமாக நாளை முதல் இரு நாள்கள் நடைபெறவிருந்த தட்டச்சு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
கனமழை எதிரொலி: தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களில் நடைபெறவிருந்த தட்டச்சுத் தோ்வுகள் பலத்த மழை காரணமாக நவ.19, 20 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் தட்டச்சு பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அரசு சாா்பில் தகுதித் தோ்வுகள் நடத்தப்படுகின்றன.

இதற்கிடையே இதுவரை நடத்தப்பட்ட தட்டச்சுத் தோ்வு முறையில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி புதிய முறையிலான தட்டச்சு தோ்வு நவம்பா் 12, 13-ஆம் தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தோ்வுக்கு சுமாா் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ளனா்.

இந்நிலையில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடா்ந்து நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் சனி, ஞாயிறு ஆகிய நாள்களில் நடைபெறவிருந்த தட்டச்சுத் தோ்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘தட்டச்சுத் தோ்வுகள் தற்காலிகமாக நவ.19, 20-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகின்றன. மற்ற போட்டித் தோ்வுகளுக்கு குறுக்கீடு வராதபடி இறுதி மாற்று தோ்வு தேதிகள் விரைவில் வெளியிடப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களை இணையத்தில் அறிந்து கொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே குரூப் 1 முதல்நிலைத் தோ்வு அடுத்த வாரம் நவ.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தட்டச்சு தோ்வுக்கான தற்காலிக தேதிகளும் மாற்றப்பட வாய்ப்புள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com