ஆம்பூர் அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருளர் இன மக்கள் இருளில் வாழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் ஊராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் இருளர் வட்டம் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், 60-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மலையடிவாரத்தில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல், மின்சார வசதி கூட இன்றி இருளில் வாழ்ந்து வருகின்றனர்.
அப்பகுதி மக்களுக்கு இருளர் இனச் சான்றிதழ், வீட்டுமனை பட்டா, சாலை வசதி, குடிநீர் வசதி, மின் இணைப்பு வசதி செய்து தரக்கோரி அரசு அதிகாரிகளிடம் பல முறை புகார் மனு அளித்தும் செவி சாய்க்கவில்லை.
இரவு நேரங்களில் மின்வசதி இல்லாத காரணத்தால் காட்டுப் பகுதியில் விஷப் பூச்சிகள், பாம்பு, தேள் இவ்வகை பூச்சிகள் கடித்து விடும் என்ற அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
மழைக் காலங்களில் மிகவும் அவதிக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தங்களின் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட எதிர்கால நலனை கருத்தில் கொண்டு இருளர் இனச் சான்றிதழ் வழங்கியும் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரவும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | தொடர் கனமழை: சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவிப்பு!