சேலம் குகை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 615 கிலோ வெள்ளி மற்றும் நகைகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகையை இழந்த வெள்ளித் தொழில் உரிமையாளர் தனது மைத்துனர் மீது புகார் அளித்துள்ளதால் அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் குகை மார்க்கெட் தெரு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் செவ்வாய்பேட்டை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் ஒன்று அளித்தார். அவர் அளித்த புகாரில், "எனது தாயார் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். அவரின் உடல்நிலை சரியில்லை என்பதற்காக வெள்ளிக்கிழமை எனது தாயாரை சந்திப்பதற்காக சென்று விட்டு சனிக்கிழமை காலை வந்து வீட்டிற்கு வந்தேன். வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த நான் உள்ளே சென்று பார்த்தபோது 615 கிலோ வெள்ளி மற்றும் நகை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவத்தில் எனது மைத்துனரான சத்தியநாராயணன் ஈடுபட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், வியாபாரம் ரீதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் தொழிலை பிரித்துக் கொண்ட நிலையில், இது தொடர்பாக சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் தெரிவிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் நான் இல்லாத நேரத்தில் சனிக்கிழமை காலை 8 மணி அளவில் வீட்டின் பூட்டை உடைத்து அவர் 615 கிலோ வெள்ளி மற்றும் நகைகள், பணம் எடுத்துள்ளார்.
எனவே, வெள்ளி மற்றும் நகைகளை எடுத்து சென்றவர் எனது மைத்துனர் சத்யநாராயணன் தான் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுத்து நகைகள் மற்றும் வெள்ளியை மீட்டு தர வேண்டும் என கூறியுள்ளார்.
பன்னீர்செல்வம் அளித்த புகாரி அடிப்படையில் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.